×

நடிகை கவுதமியின் ரூ.25 கோடி சொத்து மோசடி விவகாரம் கேரளாவில் பதுங்கி இருந்த பாஜ நிர்வாகி அழகப்பன், மனைவி உள்பட 5 பேர் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி

சென்னை: நடிகை கவுதமிக்கு சொந்தமான ரூ.25 கோடி மதிப்பிலான சொத்துகளை போலி ஆவணம் மூலம் அபகரித்த வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான பாஜ பிரமுகர் அழகப்பன், அவரது மனைவி நாச்சல் உள்பட 5 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கேரள மாநிலம் திருச்சூரில் கைது செய்தனர். நடிகை கவுதமி கடந்த செப்டம்பர் 11ம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் கூறியிருந்ததாவது: 2004ம் ஆண்டு எனக்கு புற்றுநோய் ஏற்பட்டதால் 4 வயது மகளின் எதிர்காலத்திற்காக அனைத்து சொத்துகளையும் விற்பனை செய்ய அழகப்பன் என்பவரை பவர் ஏஜென்டாக நியமித்தேன். ஆனால் அவர், தனது மனைவி நாச்சல் அழகப்பன், மகன் சிவா அழகப்பன் (எ) சதீஷ், மகள் ஆர்த்தி அழகப்பன் மற்றும் உறவினர்களான பாஸ்கர், ரமேஷ் சங்கர் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து 2015-16ல் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள எனது 10.63 ஏக்கர் விவசாய நிலத்தை ரூ.4.10 கோடிக்கு விற்றுள்ளார். ஆனால் அவர் எனது வங்கி கணக்கில் ரூ.58 லட்சம் மற்றும் ரூ.4.20 லட்சம் மட்டும் வரவு வைத்துள்ளார். மீதமுள்ள பணத்தை அழகப்பன் அவரது குடும்ப உறுப்பினர் பெயர்களில் உள்ள வங்கி கணக்கில் மாற்றிவிட்டார்.

அதேபோல், கடந்த 10.2.2021ல் ராமநாதபுரத்தில் 8.23 ஏக்கரில் உள்ள எனது நிலத்தை அழகப்பன் தனது மகன் சிவா அழகப்பன், மகள் ஆர்த்தி அழகப்பன் பெயரில் பதிவு செய்து கடந்த 20.10.2015ல் விற்பனை ஆவணத்தை மாற்றி எனது சொத்துக்களை ஏமாற்றி பறித்து கொண்டார்.மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நிலத்தை விற்பனை செய்ததில் ரூ.7 கோடியை அவரது கூட்டாளியான அண்ணாநகரை சேர்ந்த தொழிலதிபர் பலராமன் உள்ளிட்டோருடன் சேர்ந்து ஏமாற்றிவிட்டார். எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிககை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் மத்திய குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டார். அதன்படி கூடுதல் கமிஷனர் செந்தில் குமாரி மேற்பார்வையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்திய போது, அழகப்பன், மனைவி நாச்சல் அழகப்பன் மற்றும் மகன், மகள் பெயர்களில் சொத்துகளை மாற்றி எழுதியதும், நண்பரான பலராமன் மூலம் ரூ.7 கோடி மோசடி செய்ததும் உறுதியானது. தொடர்ந்து, அழகப்பன், அவரது மனைவி மற்றும் தொழிலதிபர் பலராமன் மீது தனித்தனியாக இரண்டு வழக்குகள் பதிவு ெசய்யப்பட்டது. அதில் திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.7 கோடி மோசடி வழக்கில் தொழிலதிபர் பலராமனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த மாதம் கைது செய்தனர்.

இந்நிலையில் நடிகை கவுதமி சொத்துக்கு பவர் ஏஜென்டாக இருந்த அழகப்பன் மற்றும் அவரது மனைவி நாச்சல் அழகப்பன் ஆகியோர் இரண்டு வழக்குகளில் முதன்மை குற்றவாளியாக சேர்க்கப்பட்டனர். கடந்த செப்டம்பர் மாதம் திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கவுதமி நிலம் மோசடி தொடர்பாக அழகப்பன் மற்றும் அவரது மனைவியிடம் விசாரணை நடத்தினர். அப்போது சில ஆவணங்களை எடுத்து வருவதாக கூறி சென்ற அழகப்பன் மற்றும் அவரது மனைவி தலைமறைவாகிவிட்டனர். மேலும், இந்த மோசடி வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்யாமல் இருக்க, சென்னை உயர் நீதிமன்றத்தில் அழகப்பன், அவரது மனைவி உள்பட 6 பேர் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு கடந்த 18ம் ேததி நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், எந்தவித அடிப்படை ஆதாரமுமின்றி புகார் அளிக்கப்பட்டுள்ளதால், முன்ஜாமீன் வழங்க வேண்டும் எனவும், நீதிமன்றம் விதிக்கக்கூடிய நிபந்தனைகளை ஏற்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. புகார்தாரரான கவுதமி தரப்பில், முன்ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்யப்பட்டது. கவுதமி மற்றும் காவல்துறை ஆட்சேபனைகளை ஏற்ற நீதிபதி, அழகப்பன் மற்றும் அவரது மனைவி நாச்சல் உள்பட 6 பேர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையடுத்து, மோசடி வழக்கில் பல நாட்களாக தலைமறைவாக இருந்து வந்த அழகப்பன், அவரது மனைவி நாச்சல், அவரது மகன் சிவா அழகப்பன், மகள் ஆர்த்தி அழகப்பன் மற்றும் உறவினர்களான கே.எம்.பாஸ்கர், சதீஷ்குமார் ஆகியோரை கைது செய்ய போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவுப்படி மத்திய குற்றப்பிரிவு துணை கஷினர் நிஷா, கூடுதல் துணை கமிஷனர் முத்துவேல் பாண்டி தலைமையிலான தனிப்படையினர் குற்றவாளிகள் இருக்கும் இடம் குறித்து சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் தீவிர விசாரணை நடத்தினர்.

அதில் அழகப்பன் உள்பட 6 பேரும் கேரள மாநிலம் திருச்சூர் அருகே புதுச்சேரி சுண்டல் பகுதியில் உள்ள பங்களாவில் பதுங்கி இருப்பது உறுதியானது. அதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு துணை கஷினர் நிஷா தலைமையிலான தனிப்படையினர் கேரளா விரைந்து சென்று அழகப்பன் உள்பட 5 பேரையும் நேற்று அதிகாலை கைது செய்தனர். பின்னர் அவர்களை அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இன்று சென்னைக்கு அழைத்து வருகின்றனர். இதில் தலைமறைவாக உள்ள கே.எம்.பாஸ்கரை தேடி வருகி்றனர்.

* 6 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை
அழகப்பன், அவரது மனைவி தலைமறைவானத்தை தொடர்ந்து, அழகப்பனுக்கு சொந்தமான சிவகங்கை, மதுரை, காரைக்குடி உள்ளிட்ட 5 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். மேலும், அழகப்பன் மற்றும் அவரது மனைவிக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் 6 முறை சம்மன் அனுப்பியும் இருவரும் நேரில் ஆஜராகவில்லை. இதனால் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அழகப்பன் மற்றும் அவரது மனைவி உள்பட 6 பேரும் வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல கூடாது என்று அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கினர்.

The post நடிகை கவுதமியின் ரூ.25 கோடி சொத்து மோசடி விவகாரம் கேரளாவில் பதுங்கி இருந்த பாஜ நிர்வாகி அழகப்பன், மனைவி உள்பட 5 பேர் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Gauthami ,BJP ,Alagappan ,Kerala ,Central Crime Branch police ,Chennai ,Gautami ,Dinakaran ,
× RELATED இடைத்தரகர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நடிகை கவுதமி புகார்!!